கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2020 11:00 PM GMT (Updated: 16 Feb 2020 11:00 PM GMT)

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபையில் எப்படி பேசுவது என்பது குறித்து புதிய மந்திரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரிகள், மந்திரிகள், புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட 10 புதிய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

சட்டசபை கூட்டத்தொடரில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மங்களூரு வன்முறை, பீதரில் தனியார் பள்ளி மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மழை, வெள்ள பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினைகள் எழுப்ப முடிவு செய்துள்ளன.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இதற்காக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக புதிய மந்திரிகள் சபையில் எப்படி பேச வேண்டும் என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக தெரிகிறது.

Next Story