அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கவிஞர் மருதகாசிக்கு மணிமண்டபம் கட்டக்கோரி மனு


அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கவிஞர் மருதகாசிக்கு மணிமண்டபம் கட்டக்கோரி மனு
x
தினத்தந்தி 17 Feb 2020 10:15 PM GMT (Updated: 17 Feb 2020 9:01 PM GMT)

கவிஞர் மருதகாசிக்கு மணிமண்டபம் கட்டக்கோரி அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை வகித்து, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 460 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார்.

கூட்டத்தில் கவிஞர் மருதகாசிக்கு அவர் பிறந்த ஊரான மேலக்குடிகாடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 3 பேருக்கு 3 சக்கர சைக்கிள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் கோரிக்கை அளித்த மனுதாரர்களுக்கு உரிய பதிலை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி கா.பொற்கொடி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஏழுமலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.சரளா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story