சேலத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த பட்டதாரி வாலிபர் கைது


சேலத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 8:12 PM GMT)

சேலத்தில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலை கிடைக்காததால் கொள்ளையடிக்க முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே அரியானூர் பகுதியில் பழைய சேர்மன் தோட்டம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்திற்கு அந்த பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றனர். அப்போது அங்கு ஏ.டி.எம். எந்திரம் மற்றும் அதில் பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவை உடைக்கும் முன்பு அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

அதில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்து அது முடியாமல் போகவே அவர் திரும்பி செல்வது பதிவாகி இருந்தது. இதையொட்டி சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் பணியாரக்கடை வைத்து நடத்தி வரும் கண்ணன் என்பவரது மகன் கார்த்திக்ராஜா (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.

கைது

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் பி.எஸ்.சி. பட்டதாரி என்றும், வேலை கிடைக்காமல் இருந்ததால் சிரமப்பட்டு வந்ததும், இதனால் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story