விலை உயர்வுக்கு கண்டனம்: கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


விலை உயர்வுக்கு கண்டனம்: கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 10:25 PM GMT)

கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதனஆர்ப்பாட்டம்நடந்தது.

நாகர்கோவில்,

மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதே போல குமரி மாவட்டத்தில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், “பா.ஜனதா ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதன் மூலமாக சாதாரண மக்கள் மீண்டும் விறகு அடுப்பில் சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஆட்சி செய்ய தெரியாத மோடி அரசை அகற்றும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

கியாஸ் சிலிண்டர்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஷ், மாநகர தலைவர் அலெக்ஸ், தங்கம்நடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது காலி கியாஸ் சிலிண்டரை காங்கிரசார் கொண்டு வந்திருந்தனர். பின்னர் அதை சாலையின் நடுவே வைத்து மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்தபகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுபோல், மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story