முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் செந்துறை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்


முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் செந்துறை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 19 Feb 2020 10:30 PM GMT (Updated: 19 Feb 2020 8:52 PM GMT)

செந்துறை பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், அதன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி, துணைத் தலைவர் மணிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி வரவேற்றார். ஒன்றிய மேலாளர் முருகானந்தம் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் அதிக அளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. எனவே இங்கு முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். உஞ்சினி கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்டு ஆலை லாரிகள் நல்லாம்பாளையம், இலங்கைச்சேரி கிராம விவசாயிகள் பயன் படுத்தி வந்த நீர் வழித்தடம் மற்றும் வண்டிப்பாதையை ஆக்கிரமித்து செல்வதை தடுக்க வேண்டும்.

பசுமைக்காடுகள்

ஆலத்தியூர் மற்றும் தளவாய் பகுதியில் இயங்கிவரும் சிமெண்டு ஆலை நிர்வாகத்தினர் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து சுரங்கங்கள் வெட்ட முயற்சி செய்வதை தடுக்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட இருக்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

பழைய சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடி பசுமைக் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமெண்டு் ஆலை கழிவுகளை வெள்ளாற்றில் விடுவதால் ஆற்று நீர் மாசுபடுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story