வாசுதேவநல்லூரில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த மரக்கடைக்காரர் போலீசார் விசாரணை


வாசுதேவநல்லூரில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த மரக்கடைக்காரர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Feb 2020 10:30 PM GMT (Updated: 20 Feb 2020 1:56 PM GMT)

வாசுதேவநல்லூரில் உடல் அழுகிய நிலையில் மரக்கடைக்காரர் பிணமாக கிடந்தார்.

வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூரில் உடல் அழுகிய நிலையில் மரக்கடைக்காரர் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரக்கடைக்காரர் 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மைதீன் அப்துல்காதர் என்ற சேட் (வயது 36). இவர் ராஜபாளையம் சாலையில் கலிங்கலாறு ஆற்றுப்பாலம் அருகே மரக்கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 13–ந் தேதி ஒரு திருமண விழாவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதீன் அப்துல்காதரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை கலிங்கலாறு ஆற்றுப்பாலம் அருகே நாணல் செடிகளுக்கு இடையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் தங்கம் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.

பிணமாக கிடந்தார் 

அப்போது அங்கு உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது தெரியவந்தது. மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிணத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காணாமல் போன மைதீன் அப்துல்காதர் என்பது தெரியவந்தது. மைதீன் அப்துல்காதருக்கு கடந்த சில மாதங்களாக வியாபாரம் மந்தமாக இருந்து வந்ததாகவும், இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. மைதீன் அப்துல்காதருக்கு திருமணம் முடிந்து மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story