காராச்சிக்கொரை வனக்கால்நடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மரநாய்க்குட்டி


காராச்சிக்கொரை வனக்கால்நடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மரநாய்க்குட்டி
x
தினத்தந்தி 20 Feb 2020 10:00 PM GMT (Updated: 20 Feb 2020 8:09 PM GMT)

விவசாய தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட மரநாய்க்குட்டி காராச்சிக்கொரை வனக்கால்நடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

பவானிசாகர், 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரநாய்க்குட்டி ஒன்று சுற்றித்திரிந்தது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மர நாய்க்குட்டியை மீட்டு பவானிசாகர் அருகே உள் காராச்சிக்கொரை வனக்கால்நடை மையத்தில் ஒப்படைத்தனர். அந்த மரநாய்க்குட்டியை கால்நடை மைய டாக்டர் அசோகன் மற்றும் உதவியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கால்நடை ஆஸ்பத்திரி டாக்டர் அசோகன் கூறுகையில் ‘இது அரியவகை இனமான மரநாய்க்குட்டி ஆகும். பிறந்து சில மாதங்கள்தான் இருக்கும். மரங்களில் வாழும் தன்மை உடைய மரநாய்கள் தென்னை மரங்களில் முகாமிட்டு இரவு நேரத்தில் மட்டும் இரை தேடும் பழக்கம் உள்ளதாகும். பகல் நேரத்தில் உறங்கும் மரநாய்கள் எளிதில் மனிதர்களின் கண்ணுக்கு புலப்படாது. 

தென்னை மரத்தில் உள்ள இளநீரை தனது கூரிய பற்களால் துளை போட்டு குடித்துவிடும். மரநாய்கள் அரிய வகை உயிரினங்களாக பட்டியலிடப்பட்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மரநாய்க்குட்டி தனது தாயை பிரிந்துவிட்டது. எனவே அது தானாக சென்று இரை தேடும் வரை இந்த மையத்தில் வளர்க்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும். தற்போது மரநாய்க்குட்டிக்கு உணவாக பால் புகட்டப்படுகிறது ,’ என்றார்.

Next Story