போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க திருச்சி வயலூர் சாலைக்கு மாற்றுப்பாதை கண்டறியப்பட வேண்டும்


போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க திருச்சி வயலூர் சாலைக்கு மாற்றுப்பாதை கண்டறியப்பட வேண்டும்
x
தினத்தந்தி 20 Feb 2020 11:30 PM GMT (Updated: 20 Feb 2020 8:35 PM GMT)

போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க திருச்சி வயலூர் சாலைக்கு பதில் மாற்றுப்பாதை கண்டறியப்பட வேண்டும் என்று கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா, ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முசிறி உதவி கலெக்டர் பத்மஜா ஆகியோர் பேசினர்.

அகலப்படுத்த வேண்டும்

திருச்சி - கருர் புறவழிச்சாலையில் கே.டி.சந்திப்பு முதல் ரெயில்வே மேம்பாலம் வரையிலும் சாலை குறுகலாக உள்ளது. சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்கும் நோக்கில், அந்த சாலையை அகலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதால், அதை தவிர்க்கும் நோக்கில் அண்ணாசிலை ரவுண்டானா அளவை குறைத்து சாலையை அகலப்படுத்த வேண்டும்.

வயலூர் சாலை

திருச்சி எம்.ஜி.ஆர்.நகர் சந்திப்பு முதல் உய்யகொண்டான் திருமலை பாலம் வரை வயலூர் சாலை குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடி மற்றும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மாற்றுப்பாதை கண்டறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும். திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் அணுகுசாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியில் இருந்து சாத்தனூர் செல்லும் சாலையில் மாநகர ஆயுதப்படை மற்றும் உழவர் சந்தை முன்பு வேகத்தடைகள் அமைக்க வேண்டும். பால்பண்ணை பகுதியில் தஞ்சாவூரில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட்டிற்கு திரும்பும் அணுகு சாலையின் முகப்புப்பகுதியில் சாலையை விரிவுப்படுத்த வேண்டும். மேலும் இவ்வளைவில் அச்சுறுத்தும் நிலையில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தை இடமாற்றம் செய்து தர வேண்டும். ஜி-கார்னர் அணுகுசாலை டி.வி.எஸ்.டோல்கேட்டில் வந்து சேரும் இடத்தில் புதுக்கோட்டை மார்க்கத்தில் அணுகு சாலை விரிவுப்படுத்தப்பட வேண்டும்.

மன்னார்புரத்தில் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக சாலை மற்றும் கே.கே.நகர் சாலை சந்திப்புப்பகுதி இருண்டு கிடப்பதால் அச்சாலை சந்திப்பில் உயர்சக்தி மின் விளக்கு நிறுவப்பட வேண்டும். தற்போது குட்ஷெட் மேம்பாலம் முதல் டி.வி.எஸ்.டோல்கேட் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சாலையை சீரமைக்க வேண்டும். செந்தண்ணீர்புரம் சாலை சந்திப்புக்கருகே அணுகுசாலை தொடர்ச்சியாக இல்லாமல், குறுக்கே பாலம் உள்ளதால் பிரதான சாலைக்கு சென்று பின்னர் மீண்டும் அணுகு சாலையை அடையும் வகையில் இருப்பதை மாற்றி, தொடர்ச்சியாக அணுகுசாலையில் செல்லும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Next Story