ராயக்கோட்டையில் வேன் டிரைவர் கல்லால் தாக்கி கொலை; நண்பர் கைது


ராயக்கோட்டையில் வேன் டிரைவர் கல்லால் தாக்கி கொலை; நண்பர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2020 11:30 PM GMT (Updated: 20 Feb 2020 9:20 PM GMT)

ராயக்கோட்டையில் வேன் டிரைவரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது தக்காளி மண்டி கூட்டு ரோடு. சம்பவத்தன்று இங்குள்ள அரசு மதுபான கடை அருகில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ‘108’ ஆம்புலன்ஸ் மூலமாக அவரை கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நபர் இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

இதையடுத்து அவரது உடலை பதப்படுத்தி வைப்பதற்காக தர்மபுரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்த அந்த நபர் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக அவரது புகைப்படத்துடன் கூடிய தகவல்களை துண்டுபிரசுரங்களாக ராயக்கோட்டை போலீசார் அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

நண்பர் கைது

அதில் இறந்து போன நபர் ராயக்கோட்டை அருகே உள்ள அளேசீபம் கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவரான ஆனந்த் (வயது 36) என தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆனந்தின் தலையில் பலத்த காயம் இருந்ததும், அவர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினார்கள். இது குறித்து விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா உத்தரவிட்டார். அதன் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் வேன் டிரைவர் ஆனந்தை கொலை செய்தது அவரது நண்பரான ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த சங்கரின் மகன் சரத் (24) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சரத் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

மது போதை

நானும், ஆனந்தும் நண்பர்கள். கடந்த 13-ந் தேதி 2 பேரும் மது போதையில் இருந்தோம். அப்போது எனது செல்போனை ஆனந்த் கேட்டார். நான் கொடுத்தேன். அப்போது செல்போனை எடுத்துக் கொண்டு ஆனந்த் ஓட முயன்றார். நான் தடுக்க சென்ற போது என்னை கல்லால் தாக்கினார்.

இதில் காயம் அடைந்த நான் கோபத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து ஆனந்தின் தலையில் பலமாக தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் ஆனந்திடம் இருந்த எனது செல்போனை எடுத்துக் கொண்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து கைதான சரத்தை போலீசார் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story