பெங்களூருவில் திருட்டு, கொள்ளை உள்பட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 86 பேர் கைது ரூ.2.45 கோடி நகைகள், வாகனங்கள் மீட்பு


பெங்களூருவில் திருட்டு, கொள்ளை உள்பட   குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 86 பேர் கைது   ரூ.2.45 கோடி நகைகள், வாகனங்கள் மீட்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:15 PM GMT (Updated: 20 Feb 2020 9:38 PM GMT)

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை உள்பட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 86 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2.45 கோடி மதிப் பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டன.

பெங்களூரு, 

பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீசார், நகரில் திருட்டு, சங்கிலி பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்த கும்பல்களை கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள், வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சம்பிகேஹள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில், போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மீட்கப்பட்ட நகைகள், வாகனங்களை பார்வையிட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட பொருட்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

86 பேர் கைது

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 86 பேரை வடகிழக்கு மண்டலத்தில் உள்ள சம்பிகேஹள்ளி, சிக்கஜாலா, தேவனஹள்ளி உள்ளிட்ட போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 2 கிலோ 316 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், 10 சொகுசு கார்கள், 32 இருசக்கர வாகனங்கள், 143 செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 45 லட்சம் ஆகும். இதன்மூலம் நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த திருட்டு, சங்கிலி பறிப்பு, கொள்ளை உள்பட 42 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

குற்ற சம்பவங்களில் தொடர்புடைய கும்பல்களை திறமையாக செயல்பட்டு பிடித்த வடகிழக்கு மண்டல போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறினார். பேட்டியின் போது வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் உடன் இருந்தார்.

Next Story