நாமக்கல்லில் பரபரப்பு: மோட்டார்சைக்கிளால் மோதி பெண்ணிடம் தாலியை பறிக்க முயற்சி


நாமக்கல்லில் பரபரப்பு: மோட்டார்சைக்கிளால் மோதி பெண்ணிடம் தாலியை பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 20 Feb 2020 11:30 PM GMT (Updated: 20 Feb 2020 9:41 PM GMT)

நாமக்கல்லில் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணின் மீது மோட்டார்சைக்கிளால் மோதி தாலியை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்,

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சாமிநாத புரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி சுமதி (வயது 55). இவர்கள் தங்களது மகனின் திருமண பத்திரிகை வைப்பதற்காக நேற்று காலை நாமக்கல் வந்தனர். பின்னர் இங்குள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் சுமதியின் மீது மோட்டார் சைக்கிளை மோதவிட்டனர். இதில் சுமதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த தருணத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் சுமதி கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றனர்.

பரபரப்பு

ஆனால் சுமதி தாலியை இறுக்கமாக பிடித்து கொண்டார். கயிறு மட்டுமே அவர்களிடம் சிக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் திருடன், திருடன் என சத்தம் போட்டார். பொதுமக்கள் அங்கு திரண்டு வருவதற்குள் மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் மோட்டார்சைக்கிள் மோதியதில் லேசான காயம் அடைந்த சுமதியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோட்டார்சைக்கிளை மோதி பெண்ணிடம் 3 பவுன் தாலியை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story