நாகர்கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்


நாகர்கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 20 Feb 2020 11:00 PM GMT (Updated: 20 Feb 2020 10:32 PM GMT)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை (தொடக்கக்கல்வி) சார்பில் மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு வளையம் போடுதல், பலூன் உடைத்தல், சாக்கு ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல் மற்றும் தடை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதே போல மாணவிகளுக்கு தீக்குச்சி அடுக்குதல், ஊசியில் நூல் கோர்த்தல், பலூன் ஊதி உடைத்தல், குப்பியில் நீர் ஊற்றுதல் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் அணிவகுப்பும் நடந்தது.

பரிசுகள்

முன்னதாக நடைபெற்ற விளையாட்டு விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் சுரேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மோகனன் ஒலிம்பிக் கொடி ஏற்றினார். விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் டேனியல் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் பாக்கியசீலன், வள்ளிவேலு, உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ், வட்டார கல்வி அதிகாரிகள் ஹரிகுமார், ஜெயசந்திரன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story