தண்ணீர் தொட்டியில் விழுந்து 1 வயது ஆண் குழந்தை பலி


தண்ணீர் தொட்டியில் விழுந்து 1 வயது ஆண் குழந்தை பலி
x
தினத்தந்தி 21 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 1:04 PM GMT)

காவேரிப்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 1 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

பனப்பாக்கம், 

காவேரிப்பாக்கத்தை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (23). இவர்களின் மகள் தர்ஷினி (4). மகன் எழிலன் (1).

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஐஸ்வர்யா தனது மகன் எழிலனை வீட்டின் தரையில் பாய் போட்டு தூங்க வைத்துள்ளார். குழந்தை தூங்கியபிறகு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு அவர் சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அவர் தூங்க வைத்து விட்டு சென்ற குழந்தை அந்த இடத்தில் இல்லாதததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் குழந்தை எங்கே என்று அவர் தேடினார். அப்போது வீட்டில் உள்ள சுமார் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் எழிலன் தவறி விழுந்து தண்ணீரில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு எழிலன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 வயது ஆண் குழந்தை தவழ்ந்து வந்து தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூடி வையுங்கள் 

வீடு மற்றும் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டிகளை திறந்து வைக்காமல் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். மேலும் குழந்தைகளை தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாட அனுமதிக்க கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

Next Story