செம்பனார்கோவிலில் தி.மு.க. பொதுக் கூட்டம்: 2021-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதி திண்டுக்கல் லியோனி பேச்சு


செம்பனார்கோவிலில் தி.மு.க. பொதுக் கூட்டம்: 2021-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதி திண்டுக்கல் லியோனி பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2020 11:00 PM GMT (Updated: 21 Feb 2020 11:00 PM GMT)

செம்பனார்கோவிலில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்தில் 2021-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதி என்று திண்டுக்கல் லியோனி பேசினார்.

பொறையாறு,

நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் தி.மு.க. பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி., தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய குழுத் தலைவர் நந்தினி, முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன் வரவேற்றார்.

தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அப்துல்மாலிக் தொடக்கவுரையாற்றினார். இதில் கட்சியின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில இணை செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பது உறுதியாகி விட்டது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதேபோல் வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டும் அல்ல, இந்துக்களுக்கும், இலங்கை தமிழ் அகதிகளுக்கும் எதிரானது தான். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்து வருகிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக தி.மு.க. துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் மதிவாணன், கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட உறுப்பினர்கள் வெண்ணிலா, ராபியா நர்கீஸ் பானு, துளசிரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கட்சி நிர்வாகி பாலையா நன்றி கூறினார்.

Next Story