விருத்தாசலத்தில், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி - தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது


விருத்தாசலத்தில், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி - தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2020 10:30 PM GMT (Updated: 22 Feb 2020 12:53 AM GMT)

விருத்தாசலத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் நிதி நிறுவன கோட்ட மேலாளர் வினோதயா (வயது 33). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், எங்கள் நிதி நிறுவனத்தின் விருத்தாசலம் கிளை மேலாளராக சிதம்பரம் தில்லைவிடங்கனை சேர்ந்த ஜெயபால் மகன் சுகுமாறன் (28) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 2018-2019-ம் ஆண்டில் 235 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் நீங்கள் பெற்ற கடன் தொகையை முழுவதுமாக செலுத்தினால் கூடுதலாக கடன் கிடைக்கும் என்று கூறி, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 424 வசூலித்து, அவர்களுக்கு போலியான தடையில்லா சான்று வழங்கி மோசடி செய்து விட்டார். ஆகவே மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் மோசடி செய்த சுகுமாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் அதை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலி ஆவணம் கொடுத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் மோசடி செய்ததை சுகுமாறன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story