தலையில் கல்லை போட்டு 4 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்


தலையில் கல்லை போட்டு 4 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 23 Feb 2020 12:30 AM GMT (Updated: 22 Feb 2020 7:07 PM GMT)

தலையில் கல்லைபோட்டு 4 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்,

சேலம் 5 ரோடு அருகே உள்ள திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் கடந்த 2-ந் தேதி வடமாநிலத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கொலை செய்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இதேபோல் கடந்த 3-ந் தேதி சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த பொன்னம்மா பேட்டையை சேர்ந்த பழ வியாபாரி அங்கமுத்து (வயது 60) தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த கொலைகளுக்கு முன்னதாக நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பருத்திப்பள்ளியை சேர்ந்த பெரியசாமி (70) என்பவர், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நிழற்குடையில் தூங்கி கொண்டிருந்த போது தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைகள் தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் சிக்கினார்

இதைத்தொடர்ந்து கொலைகள் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் வருவதும், கல்லால் தாக்கி முதியவர்களை கொலை செய்து விட்டு பணத்தை திருடி செல்வதும் தெரியவந்தது. இந்த வாலிபர் யார்? என கண்டறிய மாநகர போலீசார் 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் கண்காணிப்பு கேமரா பதிவில் இருந்த வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் சிக்கினார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வந்தார். அதாவது 3 முதியவர்களை கல்லால் தாக்கி கொலை செய்தது நான் தான் என்றும், பின்பு நான் கொலை செய்யவில்லை என்றும் மாறி, மாறி தெரிவித்து வந்ததால் போலீசார் குழப்பத்திற்கு உள்ளானார்கள்.

பரபரப்பு வாக்குமூலம்

இந்தநிலையில் பிடிபட்ட வாலிபரின் புகைப்படம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இருந்த அந்த வாலிபரின் புகைப்படங்களை எடுத்து சென்னையில் உள்ள தடய அறிவியல் பிரிவுக்கு ஒப்பிட்டு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபர், அந்த வாலிபர் தான் என தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இதனால் 3 முதியவர்களையும் கொலை செய்தது அந்த ‘சைக்கோ’ வாலிபர் தான் என உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அய்யம்பாளையம் சித்தேரியில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்த மார்க்கண்டன் என்பவரின் மகன் ஆண்டிச்சாமி (19) என்பதும், கஞ்சாவிற்கு அடிமையானவர் என்பதும், திண்டுக்கல்லில் கஞ்சா புகைத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

எனவே அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டை விட்டு துரத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கஞ்சா புகைக்கும் பழக்கம்

எனது தந்தை மார்க்கண்டன் மற்றும் தாயார் நாகம்மாள் ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர். எனக்கு ராமன் என்ற தம்பி உள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். இதையடுத்து எனது தாய் தான் என்னையும், தம்பியையும் கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கவனித்து வந்தார். படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட நான் 10-ம் வகுப்பு தேர்வில் 428 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். தமிழில் 80-க்கு மேல் மதிப்பெண் எடுத்துள்ளேன்.

தந்தை திடீரென வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதால், பண வசதி இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற தொடங்கினேன். அப்போது கஞ்சா புகைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த என் தாயார் எனக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். இதுமட்டுமல்லாமல் கஞ்சா போதையிலேயே இருந்ததால் தாயை தாக்கி பணத்தை பறித்து செல்வேன்.

ஒரு நாள் பணம் தரமறுக்கவே தூங்கி கொண்டியிருந்த தாயை கல்லால் தாக்கினேன். பக்கத்து வீடுகளிலும் ஆட்கள் இல்லாத நேரத்தில் பணத்தை எடுத்துவிடுவேன். இதை தட்டிக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரரிடம் தகராறில் ஈடுபட்டேன். தொடர்ந்து ஊர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த நான் அவர்களால் ஊரை விட்டு விரட்டப்பட்டேன்.

விசாரணை

இதற்கிடையே நாகப்பட்டினத்திற்கு சென்றிருந்தபோது கஞ்சா வாங்க பணம் இல்லாததால் அங்குள்ள பிச்சைக்காரர் ஒருவரின் தலையில் கல்லை போட்டு கொன்றேன். அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் கஞ்சா அடித்து ஊர் சுற்றினேன்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் சேலம் வந்து சுற்றி திரிந்தேன். இங்கு இரவு நேரத்தில் பிச்சைக்காரர்களிடம் பணம் திருடி கஞ்சா அடித்து வந்தேன். ஒரு சில நேரங்களில் அவர்கள் என்னை விரட்டி அடித்தனர். ஆனால் என்னால் கஞ்சா புகைக்காமல் இருக்க முடியவில்லை. சேலத்தில் 3 முதியவர்களிடம் பணத்தை எடுத்துக்கொண்டு, அவர்கள் மீது தலையில் கல்லைபோட்டு கொன்றுவிட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் மொத்தம் 4 பேரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story