மரத்தில் கார் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலி கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்


மரத்தில் கார் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலி கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 23 Feb 2020 12:00 AM GMT (Updated: 22 Feb 2020 10:21 PM GMT)

மூலனூர் அருகே கார் மரத்தில் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலியானார். கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

மூலனூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சாந்தப்பாடி ஊராட்சியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 64). இவர் சாந்தப்பாடி ஊராட்சி முன்னாள் தலைவர் ஆவார்.

இந்த நிலையில் இவர் ஒரு காரில் மகா சிவராத்திரி அன்று சாமி தரிசனம் செய்ய தாராபுரம் வந்துள்ளார். பின்னர் அங்கு சிவராத்திரி இரவு முழுவதும் கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்தார். பின்னர் நேற்று இரவு தாராபுரத்தில் இருந்து சாந்தப்பாடிக்கு காரில் திரும்பினார்.

காரை குப்புசாமி ஓட்டினார். இவருடைய கார் தாராபுரம்-மூலனூர் சாலையில் காசிலிங்கம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று சாலையின் குறுக்காக நாய் ஒன்று ஓடியது. இந்த நாய் மீது கார் மோதாமல் இருக்க காரை, குப்புசாமி திருப்பி உள்ளார்.

பலி

அப்போது எதிர்பாராத விதமாக குப்புசாமி ஓட்டிச்சென்ற கார் சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடனே அருகில் உள்ளவர்கள் குப்புசாமியை மீட்டு, தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குப்புசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story