புதுக்கோட்டை, இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்


புதுக்கோட்டை, இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்
x
தினத்தந்தி 23 Feb 2020 11:30 PM GMT (Updated: 23 Feb 2020 4:59 PM GMT)

புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் மற்றும் இடையாத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டையில் உள்ள கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடர்ந்து வாடிவாசலில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 962 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 27 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

பரிசு

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டை காண புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் லாரிகள், சரக்கு வேன்கள், டிராக்டர்கள் போன்றவற்றில் வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காரையூர்

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள இடையாத்தூர் பொன்மாசிலிங்கம் அய்யனார் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சி குமார், பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் முதல் காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 753 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 225 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

இதில் காளைகள் முட்டியதில் முருகேசன், முத்துக்காளை உள்பட 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்கம், பீரோ, கட்டில், வேட்டி, குத்துவிளக்கு, சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டையொட்டி கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story