மாசி அமாவாசையையொட்டி சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி ஆடு, கோழிகளை கடித்து பக்தர்கள் ஊர்வலம்


மாசி அமாவாசையையொட்டி சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி ஆடு, கோழிகளை கடித்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 23 Feb 2020 11:05 PM GMT (Updated: 23 Feb 2020 11:05 PM GMT)

சேலத்தில் மாசிமாத அமாவாசையையொட்டி நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சாமி வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை கடித்தபடி ஊர்வலமாக சென்றனர்.

சேலம்,

மாசி மாதத்தில் வரும் அமாவாசையில் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. அதன்படி மாசிமாத அமாவாசையையொட்டி நேற்று மாநகரின் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வந்த பக்தர்கள், அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

சேலம் டவுன் கடை வீதி பெரிய அங்காளம்மன் கோவில், ஜான்சன்பேட்டை அங்காளம்மன் கோவில், வின்சென்ட் அங்காளம்மன் கோவில், நாராயண நகர் ஏரிக்கரை அங்காளபரமேஸ்வரி கோவில், கிச்சிப்பாளையம் அங்காளபரமேஸ்வரி கோவில், ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில், சூரமங்கலம் ஸ்டேட் பேங்க் காலனி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் மற்றும் நகரில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளம் முழங்க அந்தந்த பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

சாமி ஆடினர்

சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்காளம்மன் உள்பட பல்வேறு சாமிகள் போல வேடமிட்டு ஆடியவாறு சென்றனர். அப்போது வழிநெடுக திரளான மக்கள் நின்றுகொண்டு தங்களின் பல்வேறு நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு சாமியாடியவாறு வந்த பக்தர்களிடம் ஆட்டுக்குட்டிகளையும், கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்தனர். ஆட்டுக்குட்டிகளை வாங்கிய பக்தர்கள் தங்கள் கழுத்தில் மாலைபோல் தூக்கிபோட்டு ஆடியபடியே ஊர்வலமாக வந்ததுடன், ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்தனர்.

இன்னும் சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி, அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டே சுடுகாடு நோக்கி வந்தனர். சாமியாடியவாறு வந்த பக்தர்களின் உடல் முழுவதும் ஆடு, கோழிகளின் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. மேலும் சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைகுழியில் கிடந்த இறந்த மனிதனின் மண்டை ஓட்டை கவ்வியபடி, ஆடு, கோழிகளை கடித்து ஆக்ரோ‌‌ஷத்துடன் ஊர்வலமாக வந்தனர். இது மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. இப்படி மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் வீட்டில் உள்ள பொதுமக்கள், அவர்களின் பாதங்களில் தண்ணீர் ஊற்றி கழுவி வழிபட்டனர்.

விபூதி கொடுத்து ஆசி

சேலம் பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஆக்ரோ‌‌ஷத்துடன் ஆடியவாறு வந்த பக்தர்கள், அங்கு கூடி இருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், ஜான்சன்பேட்டை சுடுகாடு, சந்தைபேட்டை மயானம், கன்னங்குறிச்சி சுடுகாடு, சீலநாயக்கன்பட்டி சுடுகாடு, நஞ்சப்பட்டி சுடுகாடு என நகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சுடுகாடுகளில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.

சேலம் அம்மாபேட்டை, நாராயணநகர், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, கிச்சிப்பாளையம், கன்னங்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் ஊர்வலமாக அருகில் உள்ள சுடுகாட்டில் நடந்த மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு வந்தனர். காக்காயன் சுடுகாட்டுக்கு பட்டைகோவில், அணைமேடு, பச்சப்பட்டி, குமாரசாமிபட்டி, சின்னபுதூர், பொன்னம்மாபேட்டை, கருவாட்டுபாலம், ஆனந்தா இறக்கம் ஆகிய இடங்களில் இருந்து சாமி ஊர்வலத்துடன் காளிவேடமிட்ட பக்தர்கள் வந்தனர்.

வழிபாடு

காளிவேடமிட்ட பக்தர்கள் சுடுகாட்டை நெருங்கும் வேளையில் பாதையில் திருமணம் ஆகாத இளம்பெண்கள், குழந்தையில்லாத பெண்கள் மற்றும் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டவர்கள் நேர்த்தி்க்கடனாக தரையில் படுத்திருந்தனர். சிலர் கைக்குழந்தையுடன் தரையில் படுத்திருந்ததையும் காணமுடிந்தது. அவர்களை சாமிவேடமிட்ட பக்தர்கள் ஒவ்வொருவராக தாண்டி சென்றனர். இவ்வாறு செய்தால் அவர்கள் குடும்பத்தில் உள்ள க‌‌ஷ்டங்கள், சண்டைகள் தீரும், நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தோ‌‌ஷம் நீங்கும், பேய், பிசாசு பிடித்தவர்கள் குணம் அடைவார்கள், நோய்நொடிகள் தீரும் என்பது மக்களின் ஐதீகம்.

மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி இறந்தவர்களின் கல்லறை, நினைவிடங்கள் சுடுகாட்டில் புதுப்பிக்கப்பட்டு இருந்தது. இறந்தவர்களின் நினைவிடங்களில், உறவினர்கள் மாலை அணிவித்தும் தேங்காய், பழம், சூடம், அவல், பொரி வைத்தும் வழிபட்டனர். அத்துடன் இறந்தவர்களுக்கு பிடித்தமானவற்றை படையலாக வைத்தும் வழிபாடு செய்தனர்.

ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சாமி சிலைகள், அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சேலம் மாநகரில் நேற்று சுடுகாட்டில் நடத்தப்பட்ட மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதையொட்டி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

Next Story