குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கிணற்றை மீட்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கிணற்றை மீட்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 24 Feb 2020 11:30 PM GMT (Updated: 24 Feb 2020 5:16 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கிணற்றை மீட்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர்அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமம் அம்பேத்கர் நகர் கிழக்கு தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் தெருவில் வார்டு எண் 5-ல் உள்ள பஞ்சாயத்து கிணறு மூலம் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். தற்போது கடந்த சில மாதங்களாக அந்த கிணறு தூர்வாரப்படாததால் பயன்படுத்த முடியாமல் போனது. இந்நிலையில் தனிநபர் ஒருவர் அந்த கிணற்றில் மண்ணை போட்டு மூடி ஆக்கிரமித்து வருகிறார்.

இதனை தடுத்த எங்களிடம் அவர் கிணற்றை மூடுவதற்கு கலெக்டரே எனக்கு அனுமதி வழங்கியுள்ளார். நீங்கள் எதிர்த்தால் உங்கள் மீது வழக்கு தொடருவேன் என்று கூறி மிரட்டி வருகிறார். எனவே அந்த கிணற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

புதிய தாலுகாவாக...

இதேபோல் சமூக ஆர்வலரும், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில முன்னாள் செயற்குழு உறுப்பினருமான அழகு மாமன்னன் மருதை முத்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்ட மக்களின் வசதிக்காக புதிதாக ஒரு தாலுகாவை உருவாக்க வேண்டும். அதற்கு குன்னம் தாலுகாவில் உள்ள பகுதிகளை பிரித்து, தேவைப்பட்டால் ஆலத்தூர் தாலுகாவில் ஒரு சில பகுதிகளையும் பிரித்து கோவில்பாளையத்தை தலைமையாக கொண்டு, அதனை தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.

இதேபோல் மாவட்டத்தில் பெரம்பலூரில் மட்டும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. எனவே கோவில்பாளையம், ஒகளூரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

261 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 261 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பெரம்பலூர் தாலுகாவை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் ஆணைகளையும், மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் முதல்- அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 32 பெண் குழந்தைகளுக்கு ரூ.12 லட்சத்து 88 ஆயிரத்து 185 தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், உதவி ஆணையர் (கலால்) ஷோபா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை கலெக்டர் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதேவி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story