போராட்ட களமாக மாறிய கலெக்டர் அலுவலக வளாகம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு


போராட்ட களமாக மாறிய கலெக்டர் அலுவலக வளாகம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Feb 2020 11:30 PM GMT (Updated: 24 Feb 2020 7:41 PM GMT)

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற கலெக்டர் அலுவலக வளாகம் போராட்ட களமாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக வரிசையில் நின்று மனு கொடுத்தனர்.

வியாபாரிகள் போராட்டம்

ஸ்ரீரங்கம் நகர காய்கறி வியாபாரிகள் நல சங்கத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் பை மற்றும் கூடைகளில் கொண்டு வந்திருந்த புடலங்காய், பீட்ரூட், கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட அழுகிய காய்கறிகளை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.

ஸ்ரீரங்கம் பகுதியில் 2 இடங்களில் வாரத்திற்கு இரண்டு முறை எந்தவித அனுமதியும் பெறப்படாமல் நடத்தப்பட்டு வரும் வார சந்தைகளால், மாநகராட்சிக்கு முறைப்படி வரி செலுத்தி வியாபாரம் செய்து வரும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பாரி

ராம்ஜி நகரில் உள்ள பஞ்சாலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் சிலர் ஒன்று கூடி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றை 10 ஆண்டுகளாக வழங்காமல், மில் கட்டிடங்களை இடிப்பதற்காக நடந்து வரும் முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி அவர்களது போராட்டம் நடந்தது.

தரையில் உருண்ட விவசாயிகள்

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் பட்டை நாமம் வரையப்பட்ட சின்னத்துடன் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள். காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் திருச்சி மாவட்டத்தையும் சேர்க்கவேண்டும், சம்பா சாகுபடி மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்யவேண்டும், மத்திய அரசு அறிவித்த விவசாய கடன் பெறும் அட்டை எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோ‌‌ஷம் எழுப்பினர்.

தனியார் ஆலையால் பாதிப்பு

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெரியகருப்பூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் குடிநீர் ஆலையால் நிலத்தடி நீர் உப்பு தன்மையடைந்து விட்டது, வாழை, தென்னை மரங்கள் கருகிவிட்டன. ஆலையில் இருந்து திறந்து விடப்படும் வேதிபொருளால் வாய்க்கால் தண்ணீரும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆலையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி கிராம மக்கள் மனு கொடுத்தனர். லால்குடியில் கடந்த 2008-ம் ஆண்டு லால்குடியில் தொடங்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் வேலை செய்து வரும் அலுவலக பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

மண்ணச்சநல்லூர் வட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்து கிரு‌‌ஷ்ணன் கொடுத்த மனுவில், நெ-1 டோல்கேட் பகுதியில் மருத்துவமனை, பள்ளி, பஸ் நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

முறைகேடு

துறையூர் தாலுகா கோவிந்தபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்து உள்ளது. வெளியூர் நபர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவினை ரத்து செய்து விட்டு விசாரணை நடத்தி தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி அ.தி.மு.க. கிளை செயலாளர் கருணாநிதி என்பவர் மனு கொடுத்தார்.

மில் தொழிலாளர்கள், விவசாயிகள், காய்கறி வியாபாரிகள் நடத்திய போராட்டங்களால் கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று போராட்ட களமாக மாறி பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story