2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முதல்-அமைச்சர் பேச்சு


2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முதல்-அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2020 12:30 AM GMT (Updated: 24 Feb 2020 9:01 PM GMT)

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று சேலத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 47 ஆயிரத்து 72 பேருக்கு நலஉதவிகள் வழங்கும் விழா சேலம் 3 ரோடு அருகே உள்ள வரலட்சுமி மகால் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலஉதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மண்ணை விட்டு மறைந்தாலும், நமது அனைவரின் மனதில் எப்போதும் நீங்கா இடம் பெற்று வாழ்ந்து வருகிறார் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே உழைத்து மறைந்தார். இந்த பூமியில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கலாம். ஆனால் சிலர் மட்டுமே மக்களின் மனதில் நிலைத்திருப்பார்கள்.

எண்ணற்ற திட்டங்களை

அந்த வகையில் மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கு குடும்பம் எதுவும் கிடையாது. தமிழக மக்களே தங்களது குடும்பம் என்று வாழ்ந்து மறைந்தார்கள். அவர்கள் செய்த சாதனைகள் ஏராளம். இதனால் அவர்கள் தமிழக மக்கள் மனதில் எப்போதும் நிலைத்து இருக்கிறார்கள். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் வாக்கியத்திற்கு ஏற்ப எம்.ஜி.ஆர்., ஏழை மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களையும், உதவிகளையும் வழங்கினார். அதேபோல், அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் கண்ட கனவை ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் செய்து முடித்தார்.

தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியோ? இந்த அ.தி.மு.க. அரசோ? எதையும் செய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தான் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் இருந்து தற்போது வரையிலும் அ.தி.மு.க. அரசின் செய்த சாதனைகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சமீபத்தில் பத்திரிகைகளில் விளம்பரமாக தெரியப்படுத்தினோம். தி.மு.க. ஆட்சியில் ஏதாவது திட்டங்களை செய்தோம் என்று அவர்களால் சொல்ல முடியுமா? அவர்கள் செய்தால் தானே சொல்வதற்கு, அவர்கள் தான் எதையும் செய்யவில்லையே.

30 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி

2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவோம் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் 1 கோடியே 85 லட்சம் பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத திட்டத்தை செயல்படுத்தி காட்டினோம்.

அதேபோல், கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறப்பட்டது. எத்தனை விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. உங்களால் கூறமுடியுமா?. நிலம் வைத்திருக்கும் நபர்களிடம் அவர்களது நிலத்தை தி.மு.க.வினர் மிரட்டி வாங்கினார்கள். இதனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காவல்துறையில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு ஒன்றை ஏற்படுத்தினார்கள். அதன்மூலம் அபகரிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரடுக்கு மேம்பாலம்

பிறந்த குழந்தைக்கு அம்மா பரிசு பெட்டகம், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டம் ஆகும். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக உயர் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து சாதனை படைத்திருக்கிறது. இதுதவிர, 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக ஈரடுக்கு மேம்பாலம் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த மேம்பாலம் இன்னும் ஒரு மாதத்திற்குள் திறக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திருவாக்கவுண்டனூர், ஏ.வி.ஆர். ரவுண்டானா, இரும்பாலை பிரிவு ரோடு பகுதிகளில் புதிதாக மேம்பாலங்கள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுதவிர, செவ்வாய்பேட்டை, முள்ளுவாடி கேட், மணல்மேடு ஆகிய பகுதிகளில் ரெயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது மாமாங்கம் பார்க் பிளாசா ஓட்டல் அருகில் விரைவில் புதிதாக மேம்பாலம் கட்டப்படும்.

குடிமராமத்து பணிகள்

சேலம் மாநகரில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக காட்சி அளிப்பதை காணமுடிகிறது. மாமங்கம் பகுதியில் புதிதாக பஸ்போர்ட் ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழகத்திலேயே பிரமாண்ட முறையில் சேலத்தில் தான் பஸ் போர்ட் அமைக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதா? என்றால், எதுவும் இல்லை. சேலம் இன்னும் சில ஆண்டுகளில் தனித்துவமிக்க நகரமாக மாறிவிடும்..

தமிழகத்தில் பருவகாலங்களில் பெய்கிற மழைநீர் வீணாக செல்வதை தடுக்க ஏரி, குளங்களை சீரமைக்கும் வகையில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இது விவசாயிகளின் பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், குடிமராமத்து பணிகள் சரியாக நடக்கவில்லை என்று பேசி வருகிறார். 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தேன். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.650 கோடிக்கு அந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. உபரிநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஓய்வுபெற்ற பொறியாளர்கள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி எங்கெல்லாம் தடுப்பணை கட்ட வேண்டும் என்று அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளனர்.

7 லட்சம் ஏக்கரில்

அதன்படி ஏரி, குளங்களை தூர்வாரப்பட்டதோடு தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் டெல்டா மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கரில் கூடுதலாக பயிரிடப்பட்டு இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இது அ.தி.மு.க. அரசின் சாதனை இல்லையா?. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதனை உடனடியாக அரசிதழில் வெளியிட்டுள்ளோம். இதனால் அந்த மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது. ஆனால் 1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முதன்முதலாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் அதை மறைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தி உள்ளோம். மின்சாரம், வேளாண்மை, சுகாதாரம், சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய விருதும், ஆளுமை திறன் மிக்க மாநிலத்தில் தமிழகம் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்

ஆரம்பத்தில் இந்த ஆட்சி ஒரு வாரம் தாக்குபிடிக்குமா? ஒரு மாதம், ஓராண்டு தான் நீடிக்கும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வந்தார். ஆனால் தற்போது 3 ஆண்டுகள் கடந்து 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி வருகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது. இதனால் தி.மு.க.வை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்-அமைச்சர் கனவில் இருக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதை மு.க.ஸ்டாலின் பார்க்கத்தான் போகிறார்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு பற்றி முஸ்லிம் மற்றும் சிறுபான்மை மக்களிடம் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி போராட்டங்களை தூண்டிவிடுகின்றன. இதனை சிறுபான்மை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்த ஒரு சிறுபான்மையினரும் பாதிக்கப்படமாட்டார்கள். இதனை நாங்கள் உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story