பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்


பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த   அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:00 PM GMT (Updated: 25 Feb 2020 5:35 PM GMT)

பிரம்மாகுமாரிகள் சார்பில் சென்னையில் அமைக்கப்பட்டு இருந்த அமர்நாத் பனிலிங்கம் மற்றும் ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.

சென்னை,

சிவராத்திரியை முன்னிட்டு சென்னை பெரம்பூரில் பிரம்மாகுமாரிகள் அமைப்பு சார்பில் 84-வது ஆண்டு அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி கடந்த 18-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.

இங்கு அமர்நாத்தில் பனிலிங்கம் எப்படி குகைக்குள் அமைந்துள்ளதோ, அதேபோன்று குளிரூட்டப்பட்ட குகை அமைக்கப்பட்டு அதற்குள் பனிலிங்கம் வைக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் லிங்கம், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் லிங்கம், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஸ்வர் லிங்கம், ஓங்காரேஸ்வரர் லிங்கம், மராட்டிய மாநிலம் பரளியில் உள்ள வைத்தியநாதேஸ்வரர் லிங்கம், புனேவுக்கு அருகே உள்ள சகாயத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள பீமா ஷங்கர் லிங்கம், திரியம்பகேஸ்வரவர் லிங்கம், தொளலதாபாத் அருகே உள்ள கிரிஸ்னேஸ்வர் லிங்கம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி லிங்கம், குஜராத் மாநிலம் நாகேஸ்வரர் லிங்கம், உத்தரபிரதேச மாநிலம் காசி விஸ்வநாத லிங்கம், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் லிங்கம் ஆகியவை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

70 ஆயிரம் பேர் தரிசனம்

கடந்த 7 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியில் அமர்நாத் பனிலிங்கம் உள்ளிட்ட 13 லிங்கங்களையும் 70 ஆயிரம் பேர் தரிசனம் செய்து உள்ளனர். அத்துடன் கண்காட்சியில், பொதுமக்களின் நல்வாழ்வுக்காக போதை விழிப்புணர்வு அரங்கம், இளைஞர்கள் முன்னேறுவதற்குரிய வழிகளை கூறும் அரங்கம், ஆன்மிகத்திற்கும், அறிவியலுக்கும் உள்ள தொடர்பை கூறும் அரங்கம், தண்ணீரின் இன்றியமையாமை மற்றும் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் அரங்கம், பிரம்மா குமாரிகள் வரலாற்று அரங்கம் மற்றும் புத்தக அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கலை நிகழ்ச்சிகள்

கண்காட்சி வளாகத்தில் திறந்தவெளி அரங்கில் அபிஷேக லிங்க தரிசனம் ஒளி ஒலி காட்சியும், மாலை நேரங்களில் தேவிகளின் தத்ரூப தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், முருகர் மற்றும் நந்திதேவர் உள்ளிட்டோர் இடம்பெறும் கைலாய காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிறைவு நாளான நேற்றுமுன்தினம்ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story