பொன்னேரி அருகே கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


பொன்னேரி அருகே   கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Feb 2020 10:45 PM GMT (Updated: 25 Feb 2020 10:29 PM GMT)

பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தில் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி கட்டி குளித்த கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி, 

பொன்னேரி அருகே காட்டாவூர் கிராமத்தில் ஆனந்தவள்ளி என்கிற காளியம்மன் சித்தகண்ணீஸ்வர சாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர்களால் அமைக்கப்பட்டது.

16-ம் நூற்றாண்டில் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்து வந்தபோது மொகலாய படைகளால் தடுத்து நிறுத்தியபோதும், மீறி சென்று வெற்றி வாகை சூடி கொண்டபோது காளியம்மன் காட்சி அளித்த இடத்தில் தங்கினார்.

பின்னர் அந்த இடத்தில் கருங்கற்களால் ஆன திருக்குளத்தை அமைத்து காளியம்மனுக்கு பூஜை செய்ததாகவும் இதனை மாவீரன் சத்ரபதி சிவாஜி இந்த குளத்தில் நீராடிவிட்டு சென்று போர் புரிந்ததாகவும் கூறப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த நிலையில் கடந்த 4 நூற்றாண்டுகளாக சிறப்பு பெற்றிருந்த இந்த குளத்தில் சம அளவில் இருந்த கருங்கற்கள் சிதலம் அடைந்து காணப்படுகிறது.

இந்த கோவில் திருக்குளத்தை பழமை மாறாமல் தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்து அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஆழப்படுத்த வேண்டும்.

சிதிலம் அடைந்துள்ள திருக்குளத்தை சுற்றுச்சுவர் அமைத்து, சீரமைத்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தொடங்க மாவட்ட நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story