கன்னியாகுமரி அருகே பரிதாபம் நடுக்கடலி்ல் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் சாவு


கன்னியாகுமரி அருகே பரிதாபம் நடுக்கடலி்ல் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் சாவு
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 25 Feb 2020 10:41 PM GMT)

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சகாயமாதா தெருவை சேர்ந்தவர் வளன் சந்தியாகு தீபக் (வயது28), மீனவர். இவருக்கு மனைவியும், 2 வயதில் மகளும் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சாலோமன் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் (படகு) வளன் சந்தியாகு தீபக் உள்பட 7 பேர் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

கடலில் விழுந்தார்

நேற்று முன்தினம் அதிகாலையும் வழக்கம்போல் வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கன்னியாகுமரிஅருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். வளன் சந்தியாகு தீபக் சிறிது நேரம் மீன்பிடித்து விட்டு வள்ளத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

தூக்க கலக்கத்தில் திடீரென அவர் கடலில் தவறி விழுந்தார். இதைகண்ட சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்க முயன்றனர். அதற்குள் வளன் சந்தியாகு தீபக் கடலில் மூழ்கி இறந்தார்.

சோகம்

பின்னர், அவரது உடலை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும், இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று வளன் சந்தியாகு தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றபோது தூக்க கலக்கத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story