தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 26 Feb 2020 11:00 PM GMT (Updated: 26 Feb 2020 9:54 PM GMT)

சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 39). கோரிமேடு இருசா கவுண்டர் லைன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற எலும்பன் கார்த்திக் (38). கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராமச்சந்திரன் என்பவரது மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி அவரை தாக்கியதாக கோவிந்தராஜ் மீது செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி தாக்கியுள்ளார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசில் புகார்

இதேபோல், எலும்பன் கார்த்திக் என்பவர் தனது கூட்டாளி 4 பேருடன் சேர்த்து சதி திட்டம் தீட்டி அங்கம்மாள் காலனியை சேர்ந்த டாக்டர் ஒருவரை காரில் வழிமறித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை பறித்து கொண்டதாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதேபோல், மேலும் சிலரை மிரட்டி பணம், நகை பறித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸ் நிலையத்தில் அவர் மீது புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் எலும்பன் கார்த்திகை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், கோவிந்தராஜ், எலும்பன் கார்த்திக் ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தாலும் தங்களை திருத்திக்கொள்ளாமல் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செவ்வாய்பேட்டை போலீசார் மாநகர போலீஸ் கமி‌‌ஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

அதன்படி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கமி‌‌ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து கோவிந்தராஜ், எலும்பன் கார்த்திக் ஆகிய இருவரும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

Next Story