குமரி மாவட்ட கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்


குமரி மாவட்ட கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Feb 2020 11:30 PM GMT (Updated: 26 Feb 2020 10:04 PM GMT)

குமரி மாவட்ட கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகளுக்கான பயிற்சியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கூட்டுறவு சங்கங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. அப்போது கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக நடைமுறை, குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்படும் காசுக்கடன் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து கடன்கள், கூட்டுறவு சங்கங்களில் கணக்குகள் பராமரித்தல் மற்றும் குற்றவியல் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். மேலும் பயிற்சி கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் சட்டத்திருத்தம் கடுமையானது. ஏதாவது சரியில்லாமல் இருந்தால் அது குறித்து விளக்கங்கள் அறிய தனியாக அரசாணை உள்ளது. கூட்டுறவு இயக்கத்தை முறையான வளர்ச்சி அடைய செய்வதே கூட்டுறவு சட்டத்தின் நோக்கம். எனவே கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைவரும் கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தை பின்பற்றி பணியாற்ற வேண்டும். தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கும் கடன்களை உரிய காலத்துக்குள் வசூலிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

கவனமாக...

குறிப்பாக பண்ணை சாரா கடன்களை உரிய காலத்தில் வசூலிக்க அதிக அக்கறை செலுத்த வேண்டும். உரிய காலத்தில் கடன் தொகை வசூலிக்க முடியாமல் ஏற்படும் இழப்புக்கு வங்கி தலைவரும், நிர்வாக குழுவினர்களும் பொறுப்பேற்கப்பட்டு அந்த கடன் தொகை வசூலிக்க நேரிடும். எனவே அனைவரும் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை மிக கவனமாக கையாள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிரு‌‌ஷ்ணகுமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் சங்கரன் (நாகர்கோவில்), பாலசுப்பிரமணியன் (தக்கலை), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுப்பையா, உதவி இயக்குனர்கள் ராஜா சிவசுப்பிரமணியன் (கூட்டுறவு தணிக்கைத்துறை), ரகீம் ராஜாசிங் (குற்றவியல் வழக்கு தொடர்புதுறை), குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பிரான்சிஸ், கூட்டுறவு சார் பதிவாளர் (ஓய்வு) ரவீந்திரகுமார், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story