மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை


மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு;  கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Feb 2020 9:45 PM GMT (Updated: 28 Feb 2020 12:23 PM GMT)

வாணாபுரம் அருகே மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணாபுரம், 

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாக்கிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் எட்டியான். இவரது மகன் ராமமூர்த்தி (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊரான வாக்கிலாபட்டு வந்தார். நேற்று முன்தினம் வெளியே சென்ற ராமமூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளார்.

 இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ராமமூர்த்தி அணிந்திருந்த உடை மற்றும் செருப்பு உள்ளிட்டவர்கள் கிடப்பதாக அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்ததில் அது ராமமூர்த்தியின் செருப்பு என்பதை பெற்றோர் உறுதி செய்தனர். இதையடுத்து கிணற்றில் இருந்து தண்ணீரை மின்மோட்டார் கொண்டு வெளியேற்றினர். அப்போது கிணற்றுக்கு அடியில் ராமமூர்த்தி இறந்த நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த ராமமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தி இருந்ததற்குக் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராமமூர்த்தியின் நண்பர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராமமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story