நாமக்கல்லில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது


நாமக்கல்லில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 28 Feb 2020 10:30 PM GMT (Updated: 28 Feb 2020 9:13 PM GMT)

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் குழுவின் தலைவரும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.பி.சின்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. குழுவின் தலைவரும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.பி.சின்ராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை புள்ளியியல் அலுவலர் ஏ.கே.ஜோ, குழுவின் திட்ட இயக்குனர் பாலசுப்ரமணியன் கவுதமன், மேலாளர் பிரதீப் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டப்பணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகள் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் நடந்த சாலை பணிகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

மேலும் தூய்மை பாரத இயக்கம், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய ஓய்வூதிய திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தடுப்பணை கட்டும் பணிகள், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கும் பணிகளின் உள்பட பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்கப்பட வேண்டும் என சின்ராஜ் எம்.பி. அறிவுறுத்தினார். முன்னதாக, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) டாக்டர் மணி, உதவி கலெக்டர்கள் கோட்டைக்குமார், மணிராஜ் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story