கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணிக்கு வராததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்


கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணிக்கு வராததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்
x
தினத்தந்தி 29 Feb 2020 11:00 PM GMT (Updated: 29 Feb 2020 8:15 PM GMT)

கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணிக்கு வராததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தாவிட்டால் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுந்தரபெருமாள்கோவில் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 18-ந் தேதி கொள்முதல் பணிகள் தொடங்கின. சுந்தரபெருமாள்கோவில், உத்தாணி, திருமேற்றழிகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் விற்பனை செய்து வந்தனர்.

இந்த கொள்முதல் நிலையத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 லாரிகள் மூலம் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் திருநாகேஸ்வரம் நவீன நெல் அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒரு மூட்டைக்கு 2 கிலோ வீதம் எடை குறைவாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து குறையும் நெல்லுக்கான தொகையை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நெல் மூட்டைகள் தேக்கம்

இந்த விவகாரம் காரணமாக ஊழியர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அங்கு கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டு 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனிடையே கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தாவிட்டால் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- சுந்தரபெருமாள்கோவில் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது நெல் மூட்டைகளின் எடை சரியாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அதன் பிறகு லாரியில் ஏற்றப்பட்டு அரவை ஆலைக்கு அனுப்பப்பட்ட நெல் மூட்டைகளில் எடை குறைவு ஏற்பட்டுள்ளது.

சந்தேகம்

இதற்கு என்ன காரணம்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எடை குறைவு ஏற்பட்டதால் கொள்முதல் நிலைய ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதற்குரிய தொகையை செலுத்த வற்புறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதே கொள்முதல் நிலையத்தில் மேலும் 2 ஆயிரம் மூட்டைகள் இருப்பு உள்ளது. இந்த நெல் மூட்டைகளும் எடை குறைவாக இருக்குமோ? என ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் காரணமாக ஊழியர்கள், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால், கடந்த 4 நாட்களாக நெல் மூட்டைகளுடன் கொள்முதல் நிலையத்துக்கு வந்து காத்திருக்கிறோம். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு, கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story