மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.70 லட்சம் எரிசாராயம் பறிமுதல்


மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.70 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 March 2020 12:00 AM GMT (Updated: 29 Feb 2020 10:43 PM GMT)

மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு கன்டெய்னர் லாரியில் நூதன முறையில் கடத்திய ரூ.70 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தை விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்,

மும்பையில் இருந்து சென்னை மாதவரம் வழியாக புதுச்சேரிக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் மாதவரம் பகுதிக்கு விரைந்து சென்று அங்கு கனரக வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு கன்டெய்னர் லாரியை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 20 கிலோ எடை கொண்ட 137 மூட்டைகளில் 2,740 கிலோ பல்லாரி வெங்காயம் இருந்தது.

நூதன முறையில் எரிசாராயம் கடத்தல்

இருப்பினும் சந்தேகமடைந்த போலீசார் சில வெங்காய மூட்டைகளை எடுத்து பார்த்ததில் அதன் கீழ் பகுதியில் எரிசாராய கேன்கள் இருந்தது. பின்னர் அனைத்து வெங்காய மூட்டைகளையும் போலீசார் அப்புறப்படுத்தியதில் அதன் கீழ் பகுதியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 561 கேன்களில் 19,635 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மும்பை பெட்ரோல் பம்ப் பகுதியை சேர்ந்த ராம்தனுயாதவ் (வயது 40) என்பதும், மும்பையில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு எரிசாராய கேன்களை கன்டெய்னர் லாரியில் வரிசையாக அடுக்கி வைத்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அதன் மேல்பகுதியில் வெங்காய மூட்டைகளை அடுக்கி நூதன முறையில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

பறிமுதல்

இதனை தொடர்ந்து ராம்தனுயாதவை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.70 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கன்டெய்னர் லாரியையும் மற்றும் வெங்காய மூட்டைகளையும் பறிமுதல் செய்து மாதவரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த எரிசாராய கேன்களை மும்பையில் இருந்து யார் அனுப்பி வைத்தனர் என்றும், புதுச்சேரி மாநிலத்திற்கு யாருக்காக கடத்தப்பட்டது, யார், யாருக்கெல்லாம் இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story