தூத்துக்குடி விமான நிலையத்தில் விபத்தில் காயம் அடைந்தவர்களை கண்டறிந்து மீட்கும் நவீன கருவி - நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி விமான நிலையத்தில் விபத்தில் காயம் அடைந்தவர்களை கண்டறிந்து மீட்கும் நவீன கருவி - நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 March 2020 10:30 PM GMT (Updated: 2 March 2020 5:27 PM GMT)

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.48½ லட்சம் செலவில் விபத்தில் காயம் அடைந்தவர்களை கண்டறிந்து மீட்கும் நவீன கருவிகளை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தினமும் 6 விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் விமான நிலையத்துக்கு பயணிகள் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் விமான நிலைய விரிவாக்கப்பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே நவீன தீயணைப்பு வாகனம், ஸ்கேனர்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. தற்போது, ஏதேனும் விபத்து நடந்தால், விபத்தில் காயம் அடைந்தவர்களை கண்டறிந்து உடனடியாக மீட்டு சிகிச்சை அளிப்பதற்கான நவீன கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன.

அதன்படி காயம் அடைந்தவர்களை எளிதில் கண்டறியக்கூடிய நவீன கருவி ரூ.32 லட்சம் செலவில் வியன்னாவில் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. இந்த கருவி 500 மீட்டர் தொலைவில் உள்ளவர்களின் இதய துடிப்பை வைத்து எளிதில் காயம் அடைந்தவர்களை கண்டறியக்கூடியது. அதே போன்று தண்ணீர் மற்றும் காங்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களையும் கண்டறிய முடியும்.

இதே போன்று காங்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் நிலையை அறியக்கூடிய நவீன கருவி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஜப்பானில் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரம் மூலம் இடிபாடுகளுக்கு இடையே சிறிய துளையிட்டு அதற்குள் கேமராவை செலுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவரின் நிலையை அறிந்து கொள்ளலாம். மேலும் முதலுதவி அளிப்பதற்கும், உயிர் இழந்தவர்களின் உடலை மீட்டு வைப்பதற்கும் ரூ.9 லட்சம் செலவில் 2 தற்காலிக கூடாரமும் விமான நிலையத்துக்கு வாங்கப்பட்டு உள்ளது.

இந்த உபகரணங்கள் தொடக்க நிகழ்ச்சி விமானநிலைய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கி நவீன கருவிகளின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர்(வருவாய்) வி‌‌ஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்பதற்கான நவீன கருவிகளின் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் விமான நிலைய மேலாளர் ஜெயராமன், மற்றும் போலீசார், பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து வாடகை கார் சேவையும் தொடங்கப்பட்டது. இதனால் பயணிகள் எளிதில் கார் மூலம் வீட்டுக்கு செல்ல முடியும்.

Next Story