அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை 8,160 மாணவ- மாணவிகள் எழுதினர்


அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை 8,160 மாணவ- மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2020 11:30 PM GMT (Updated: 2 March 2020 7:42 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழ் மொழிப்பாட தேர்வினை 8,160 மாணவ- மாணவிகள் எழுதினர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் 82 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவ- மாணவிகளுக்கு நேற்று 35 தேர்வு மையங்களில் தமிழ் மொழிப்பாட தேர்வு நடந்தது. இதையொட்டி மாணவ- மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டு தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் 9.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனையை தொடர்ந்து தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துக்கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாணவ- மாணவிகள் தேர்வறைக்கு செல்வதற்கு முன் தங்களுக்கு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களிடம், பெற்றோரிடம் வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் மாணவ- மாணவிகளுக்கு கைக்கொடுத்தும், ஆசிர்வாதம் வழங்கியும் தேர்வறைக்கு அனுப்பி வைத்தனர்.

8,160 பேர் எழுதினர்

சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தமிழ் தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்த மொத்தம் 8,577 பேரில் 3,584 மாணவர்களும், 4,576 மாணவிகளும் என 8,160 பேர் தேர்வினை எழுதினர். 212 மாணவர்களும், 205 மாணவிகள் என 417 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தது.

73 பறக்கும் படை

அரியலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 52 தலைமை ஆசிரியர்களும் மற்றும் 52 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அரியலூர், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு தேர்வு மையத்திற்கு வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 10 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்- வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 73 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர். அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் பிளஸ்-2 தமிழ் தேர்வினை எழுதிய மாணவ, மாணவிகளை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன் உடனிருந்தார். மேலும் முறை சாரா கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விடைத்தாள்-வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏதும் ஏற்பட்டிருக்கிறதா? தேர்வறையில் செல்போன் ஏதும் பயன்பாட்டில் இருக்கிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

28 மாற்றுத்திறனாளிகள்

இதில் தேர்வெழுத தகுதி பெற்றிருந்த 28 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளில் 15 பேருக்கு தேர்வெழுத சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தாங்களாவே தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழ் தேர்வு என்பதால் பெரும்பாலான மாணவர்கள் திருப்திகரமாக எழுதிய மகிழ்ச்சியுடனேயே வெளியே வந்ததை பார்க்க முடிந்தது. நேற்று நடந்த பிளஸ்-2 தமிழ் தேர்வில் யாரும் காப்பி அடிக்கவில்லை. பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆங்கிலம் தேர்வு நடைபெற இருக்கிறது. வருகிற 24-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.

தனித்தேர்வர்களில் 4 பேர் வரவில்லை

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்களில் தமிழ் மொழிப்பாட தேர்வெழுத 15 மாணவர்களும், 10 மாணவிகளும் என மொத்தம் 25 பேர் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் தனித்தேர்வர்களில் 4 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்-1 தேர்வு நாளை தொடக்கம்

இதேபோல் பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) காலை தமிழ் மொழிப்பாட தேர்வுடன் தொடங்குகிறது. பிளஸ்-1 தேர்வினை அரியலூர் மாவட்டத்தில் 35 மையங்களில் 82 பள்ளிகளை சேர்ந்த 3,765 மாணவர்களும், 4,781 மாணவிகளும் என மொத்தம் 8,546 பேர் எழுதவுள்ளனர்.

Next Story