தானேயில் மகளை கொன்று தம்பதி தற்கொலை குடும்ப தகராறில் விபரீதம்


தானேயில் மகளை கொன்று தம்பதி தற்கொலை குடும்ப தகராறில் விபரீதம்
x
தினத்தந்தி 2 March 2020 10:43 PM GMT (Updated: 2 March 2020 10:43 PM GMT)

தானேயில் குடும்ப தகராறில் மகளை கொலை செய்து தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தானே,

தானே மாவட்டம் வாக்லான் கிராமத்தை சேர்ந்தவர் சிவ்ராம் பாட்டீல் (வயது44). இவரது மனைவி தீபிகா (42). இவர்களுக்கு அனுஷ்கா (4) என்ற மகள் இருந்தாள். சிவ்ராம் பாட்டீல் வீட்டருகே உள்ள ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் சிவ்ராம் பாட்டீல், தீபிகா, அனுஷ்கா ஆகியோர் வீட்டில் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சிவ்ராம் பாட்டீல், தீபிகா மற்றும் அனுஷ்கா ஆகிய 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிவ்ராம்பாட்டீல் மற்றும் தீபிகா ஆகியோர் மகள் அனுஷ்காவை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு, பின்னர் அவர்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதேபோல போலீசார் சிவ்ராம் பாட்டீல் எழுதி வைத்த தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் குடும்பத்தினரின் துன்புறுத்தல் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும் தங்களது தற்கொலைக்கு காரணம் என கூறி குடும்பத்தை சேர்ந்த 13 பேரின் பெயர்களை எழுதி வைத்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவ்ராம் பாட்டீல் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மகளை கொலை செய்து தம்பதி தற்கொலை செய்த சம்பவம் தானேயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story