மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்; ஆசிரியை பலி தங்கை படுகாயம்


மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்; ஆசிரியை பலி தங்கை படுகாயம்
x
தினத்தந்தி 2 March 2020 11:30 PM GMT (Updated: 2 March 2020 10:54 PM GMT)

மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் ஆசிரியை பரிதாபமாக பலியானார். அவரது தங்கை படுகாயம் அடைந்தார்.

குழித்துறை,

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை இறையிலி ஆனவிளாகம் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய 2-வது மகள் வெர்ஜின் பென்னட்(வயது25). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு தையல் பயிற்சி பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். அவருடைய தங்கை அபிஷா மேரியும் தையல் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.

குலசேகரத்தில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு தினமும் வெர்ஜின் பென்னட் தனது தங்கையுடன் ஸ்கூட்டரில் செல்வது வழக்கம்.

பஸ் மோதி பலி

இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் அவர்கள் ஸ்கூட்டரில் தையல் பயிற்சி பள்ளிக்கு சென்றனர். ஸ்கூட்டரை அபி‌ஷா மேரி ஓட்டினார். வெர்ஜின் பென்னட் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் பள்ளியாடி வழியாக சிராயன்குழி பகுதியில் திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து திருவிதாங்கோடு நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்று இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த வெர்ஜின் பென்னட் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

சிகிச்சை

அபி‌ஷா மேரி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெர்ஜின் பென்னட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ் டிரைவரான கண்ணாட்டு விளையை சேர்ந்த அய்யப்பதாஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story