உடையார்பாளையம் அருகே லாரி டிரைவர் சாவில் மர்மம்; உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


உடையார்பாளையம் அருகே லாரி டிரைவர் சாவில் மர்மம்; உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 3 March 2020 11:30 PM GMT (Updated: 3 March 2020 5:12 PM GMT)

உடையார்பாளையம் அருகே லாரி டிரைவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் பொட்டகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 45). லாரி டிரைவர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி(40). விவசாயி. இவர்கள் 2 பேரும் கடந்த 1-ந் தேதி இரவு அதே பகுதியில் உள்ள புதேரி கரைக்கு மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வம் வீடுதிரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வரதராஜன் மற்றும் உறவினர்கள் செல்வத்தை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை புதேரியில் ஒருவர் பிணமாக மிதப்பதாக உடையார்பாளையம் போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இதுகுறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு பார்த்தபோது அது செல்வத்தின் உடல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் செல்வத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து செல்வத்தின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தத்தனூர் பொட்டக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் ஒன்றுகூடி திருச்சி- சிதம்பரம் தேசிய நெஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோன்தாஸ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி- சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story