தமிழகம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன்பதிவு நிறுத்தம்


தமிழகம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன்பதிவு நிறுத்தம்
x
தினத்தந்தி 3 March 2020 11:26 PM GMT (Updated: 3 March 2020 11:26 PM GMT)

கால அட்டவணை, புறப்படும் இடத்தில் மாற்றம் போன்ற காரணங்களால் ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு மும்பையில் இருந்து தமிழகம் இயக்கப்பட உள்ள எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

மும்பையில் இருந்து தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரெயில்களின் கால அட்டவணை, புறப்படும் இடம், வேகம் போன்றவற்றில் வரும் ஜூலை 1-ந் தேதி முதல் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதையொட்டி மத்திய ரெயில்வே மும்பையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஜூலை 1-ந் தேதிக்கு பிறகு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன்பதிவை நிறுத்தி வைத்து உள்ளன.

இதில், சி.எஸ்.எம்.டி.- சென்னை எக்ஸ்பிரஸ்(11027, 11041), தாதர்- சென்னை எக்ஸ்பிரஸ்(12163), எல்.டி.டி.- கோவை எக்ஸ்பிரஸ் (11031), சி.எஸ்.எம்.டி.- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்(16340, 16352) ஆகியவை மும்பையில் இருந்து இயக்கப்படும் தமிழக ரெயில்கள் ஆகும்.

இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

இதில் தாதர்- சென்னை எக்ஸ்பிரஸ்(12163) ஜூலை 1-ந் தேதி முதல் எல்.டி.டி.யில் இருந்து இயக்கப்பட உள்ளது. இது குறித்து மும்பை தமிழின ரெயில்பயணிகள் சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் அப்பாத்துரை கூறியதாவது:-

சென்னை சூப்பா் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 17 பெட்டியில் இருந்து 24 பெட்டியாக அதிகரிக்கப்பட உள்ளது. அவ்வளவு நீளமான ரெயிலை தாதரில் நிறுத்த பிளாட்பார வசதி இல்லை. எனவே தான் அந்த ரெயில் எல்.டி.டி.யில் இருந்து இயக்கப்பட உள்ளது. இனிவருங்காலங்களில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்களை பன்வெலில் இருந்து இயக்க மத்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

இந்தநிலையில் எல்.டி.டி.யில் இருந்து சென்னை சூப்பர்பாஸ்ட் ரெயில் இயக்கப்பட உள்ளது தமிழர்களுக்கு சாதகமான ஒன்று தான். எனினும் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து சென்னை சூப்பர் பாஸ்ட் ரெயிலை இயக்க பரிசீலிக்குமாறு மத்திய ரெயில்வேக்கு, மும்பை தமிழின ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story