கம்மாபுரம் அருகே, சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
கம்மாபுரம் அருகே சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்மாபுரம்,
கம்மாபுரம் அருகே கோ.ஆதனூர் கிராமத்தில் தெற்கு தெரு பகுதியில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் கோ.ஆதனூர் பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் புதிதாக சாலை அமைக்கக்கோரி அங்குள்ள விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story