அரியலூரில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


அரியலூரில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 March 2020 11:30 PM GMT (Updated: 4 March 2020 4:44 PM GMT)

அரியலூர் மாவட்ட டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் பிள்ளையார்பாளையம் ஆகிய ஒன்றிய பகுதிகள் டெல்டாவாக உள்ளது. எனவே, இந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மேலும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் வேதாந்தா நிறுவனத்தினரால் போடப்பட்ட ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை கிணறுகளை அப்புறப்படுத்தவேண்டும், மேலும் அதற்காக எதிர்ப்பு தெரிவித்து போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஊர்வலம்

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தனசேகர், க.சொ.க. கண்ணன், மணிமாறன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் செயலாளர் இலக்கியதாசன், நகர செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், வி.சி.க. மாவட்ட செயலாளர் பெ.செல்வநம்பி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், திருமானூர் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர்.

Next Story