பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது: 18,670 மாணவ-மாணவிகள் எழுதினர் 947 பேர் வரவில்லை


பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது: 18,670 மாணவ-மாணவிகள் எழுதினர் 947 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 4 March 2020 11:00 PM GMT (Updated: 4 March 2020 5:41 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ் தேர்வினை 18,670 பேர் எழுதினர். இதில் 947 பேர் தேர்வு எழுத வரவில்லை.

புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 84 மையங்களில் தமிழ் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர்.

பின்னர் 9.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனையை தொடர்ந்து தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர். தேர்வு நடக்கும் போது வெளிஆட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

18,670 பேர் எழுதினர்

பிளஸ்-1 தேர்வு எழுத சென்ற மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் தங்களது குழந்தைகளை பள்ளி வரை கொண்டு வந்து விட்டு விட்டு, அவர்களை தேர்வறைக்கு அனுப்பி வைத்து விட்டு சென்றனர். முன்னதாக சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நெற்றியில் விபூதி பூசி தேர்வு மையத்தில் விட்டு விட்டு சென்றதையும் காண முடிந்தது. இதே போல் மாணவ, மாணவிகள் தேர்வறைக்கு செல்வதற்கு முன் தங்களுக்கு பாடங்களை கற்பித்த ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து படித்ததை கடைசியாக ஒரு முறை அவசர, அவசரமாக புத்தகத்தை புரட்டி பார்த்தனர். பின்னர் சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை எழுத தொடங்கினர்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 601 மாணவ-மாணவிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 528 மாணவ-மாணவிகளும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 488 மாணவ-மாணவிகள் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 617 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொது தேர்வை எழுத இருந்தனர். இதில் நேற்று நடந்த தமிழ் மொழிபாடத்தேர்வில் 8,513 மாணவர்களும், 10 ஆயிரத்து 157 மாணவிகளும் என மொத்தம் 18,670 பேர் தேர்வு எழுதினர். இதில் 35 தனித்தேர்வர்களும் அடங்குவர். மேலும் தேர்வில் 947 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் 66 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வெழுதினர்.

125 பறக்கும் படை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 86 தலைமை ஆசிரியர்களும் மற்றும் 91 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 1,314 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்-வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 125 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர். காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.

Next Story