திருவாரூருக்கு 7-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் வரவேற்பு ஏற்பாடுகள்


திருவாரூருக்கு 7-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் வரவேற்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 4 March 2020 11:30 PM GMT (Updated: 4 March 2020 6:55 PM GMT)

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 7-ந் தேதி(சனிக்கிழமை) பாராட்டு விழா நடக்கிறது. இதனையொட்டி 7-ந் தேதி திருவாரூர் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கொரடாச்சேரி,

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி பாராட்டும் விழா திருவாரூரில் 7-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமம் மற்றும் காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

விழாவுக்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் காவிரி ரெங்கநாதன் தலைமை தாங்குகிறார். விழாவில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், இரா.துரைக்கண்ணு, எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், ஏ.நவநீதகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்குகின்றனர்.

மேலும் தமிழக விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் கிரு‌‌ஷ்ணமணி, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்க மாநில தலைவர் காவிரி தனபால், துணைத்தலைவர் சுகுமாரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி, காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி ரவீந்திரன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி ராஜேந்திரன், தமிழக விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன், தமிழ்நாடு உழவர் பேரியக்க தலைவர் பாண்டுரங்கன், நெடுவாசல் கிராம கூட்டமைப்புத் தலைவர் வேலு, உழவர் குழுக்களின் ஒருங்கிணைப்பு குழு துணைத் தலைவர் டாக்டர் கோபால் ஆகியோரும் பாராட்டுரை வழங்குகின்றனர்.

இறுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்புரை வழங்குகின்றனர். முன்னதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் வரவேற்று பேசுகிறார். முடிவில் காவிரி டெல்டா விவசாயிகள் குழும பொதுச்செயலாளர் சத்தியநாராயணன் நன்றி கூறுகிறார்.

வழிநெடுகிலும் வரவேற்பு

இந்த பாராட்டு விழாவிற்கு அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், பொதுமக்கள் கலந்து கொள்வதற்கான விரிவான ஏற்பாடுகளை விவசாய சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பாராட்டு விழாவில் கலந்து கொள்ள திருவாரூருக்கு 7-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரடாச்சேரியில் செய்யப்பட்டு வரும் வரவேற்பு ஏற்பாடுகளை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று பார்வையிட்டார்.

Next Story