தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட விவரங்களை திரும்பப்பெற வேண்டும் அமித்ஷாவுக்கு நாராயணசாமி கடிதம்


தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட விவரங்களை திரும்பப்பெற வேண்டும் அமித்ஷாவுக்கு நாராயணசாமி கடிதம்
x
தினத்தந்தி 5 March 2020 12:05 AM GMT (Updated: 5 March 2020 12:05 AM GMT)

தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட விவரங்களை திரும்பப்பெற வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

14 விவரங்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய தேசிய மக்கள்தொகை பதிவேடு கடந்த 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த பதிவேட்டில் பெயர், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இடம்பெற வேண்டிய பெயர், குடும்ப தலைவருக்கு உறவு என்பன உள்பட 14 தரவுகளை கொண்ட 119 கோடி இந்தியர்களின் விவரங்களை ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் கணினியில் திரட்டப்பட்டது.

புதிதாக சேர்ப்பு

எனினும் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் புதுச்சேரி மற்றும் நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு, அகில இந்திய அளவில் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு, வீடுகள் பட்டியலில், பெற்றோர்கள் பிறந்த தேதி - இடம், கடைசியாக இருந்த இடம், கடவுச்சீட்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஓட்டுநர் உரிம எண், தாய்மொழி ஆகியன புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன.

2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தசட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு, தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன இணைக்கப்படுவதாக நாட்டு மக்களிடையே பதற்றம் மற்றும் பாதுகாப்பற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மதரீதியாக மக்களை பிரித்தாளவும், அவர்களுக்கு குடியுரிமை பறிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

எதிர்ப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படையில் தேசியமக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளன. தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020, பெற்றோர்கள் பிறந்த தேதி, இடம் பற்றிய விவரங்களை கோருகிறது. ஆனால் நம்நாட்டில் நிறைய பேர் கல்வி அறிவு இல்லாமை மற்றும் உரிய கட்டமைப்பின்மை காரணமாக தாங்கள் பிறந்த இடத்தினையும், தேதியினையும் கூற இயலாது.

அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு இந்த விவர கேட்பு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் பெற்றோர்கள் பிறந்த தேதி மற்றும் இடம் ஆகிய விவரங்கள், அவர்கள் உயிருடன் இல்லாவிட்டாலும் கேட்கப்படுவது, தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு சம்பந்தம் இல்லாத ஒன்றாகும். பீகார், கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்த தங்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.

திரும்பப்பெற வேண்டும்

தேசியமக்கள் தொகை பதிவேடு 2010-ஐ விட கூடுதல் தகவல்களை கோரும் புதிய தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 பொதுமக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய விவரங்கள் தானாக முன்வந்து வழங்கப்பட வேண்டியவையே தவிர இதற்கென ஆதாரங்களை தரத்தேவையில்லை என்று கூறப்பட்டாலும், இவ்விவரங்கள் விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ளது மக்களிடையே அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே புதிய விவரங்களை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் வீடுகளின் பட்டியலை தவிர்த்து, 2010-ம் ஆண்டு கேட்கப்பட்ட விவரங்களை மட்டும் வைத்துக்கொண்டு புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் பட்டியலை எடுக்கவேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் 2019-ல் புதிதாக சேர்க்கப்பட்ட விவரங்களை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Next Story