வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’: நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வர்த்தகர்கள் சாலை மறியல்


வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’: நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வர்த்தகர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 March 2020 11:30 PM GMT (Updated: 5 March 2020 6:58 PM GMT)

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்த நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வர்த்தகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடை உரிமையாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வாடகை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மன்னார்குடி வர்த்தக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் நேற்று காலை நகராட்சி அதிகாரிகள் மன்னார்குடி பஸ் நிலைய பகுதியில் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வர்த்தக சங்கத்தினர் மன்னார்குடி பஸ் நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க தலைவர் பாரதி ஜீவா தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.வி.ஆனந்த், அமைப்பு செயலாளர் எஸ்.எம்.டி.கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது பஸ் நிலையத்தில் முடி திருத்தும் கடை வைத்துள்ள மனோகரன் என்பவர் வாடகை உயர்வை கண்டித்து திடீரென மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மற்றும் வர்த்தக சங்கத்தினர் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே அங்கு வந்த மன்னார்குடி டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. வர்த்தகர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் கோரிக்கைகளை சட்டசபையில் முன்வைப்பதாக உறுதி அளித்தார்.

பேச்சுவார்த்தை

மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன், மன்னார்குடி தாசில்தார் கார்த்தி, மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்த்தக சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர்த்தப்படுவதற்கு முன்பு இருந்த பழைய வாடகையை வருகிற 13-ந் தேதிக்குள் கடைக்காரர்கள் செலுத்த வேண்டும் என கூறிய அதிகாரிகள், உயர்த்தப்பட்ட வாடகை குறித்து அரசிடம் பேசி முடிவெடுக்கும் வரை கடைக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story