வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல் பகுதியில் தேங்கி கிடக்கும் வைக்கோல் விவசாயிகள் கவலை


வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல் பகுதியில் தேங்கி கிடக்கும் வைக்கோல் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 5 March 2020 11:00 PM GMT (Updated: 5 March 2020 7:13 PM GMT)

வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல் பகுதியில் வைக்கோல் தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் கடைமடை பகுதியான திருமருகல் பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்குப்புத்தாறு, ஆழியாறு, நரிமணி ஆறு, வீரமுட்டிஆறு, தெற்குப்புத்தாறு, பிராவடையானாறு, வளப்பாறு ஆகிய ஆறுகள் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது திருமருமகல் பகுதியில் சுமார் 13 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இப்பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களை புகையான், குலை நோய் போன்ற பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு மகசூல் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருமருகல் பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் எந்திரம் மூலம் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோலை குவியல், குவியலாக போட்டு வைத்துள்ளனர்.

தேங்கி கிடக்கும் வைக்கோல்

கால்நடைகளுக்கு உணவுக்காக இந்த வைக்கோலை விவசாயிகள் பயன்படுத்தி வந்தபோதிலும், பேப்பர் தயாரிப்பு மற்றும் பிற தேவைகளுக்காக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வந்து வைக்கோலை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு வைக்கோல் விற்பனை குறைந்து காணப்படுகிறது.

வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல், அண்ணாமண்டபம், குருவாடி, போலகம், தென்பிடாகை, திருப்புகலூர், திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆங்காங்கே வயல்களில் வைக்கோல் தேங்கி கிடக்கிறது. இதனால் மழை காலத்தில் வைக்கோல்கள் வீணாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story