நடிகர் ஆனந்தராஜின் தம்பி விஷம் குடித்து தற்கொலை கடன் தொல்லை காரணமா? போலீசார் விசாரணை


நடிகர் ஆனந்தராஜின் தம்பி விஷம் குடித்து தற்கொலை கடன் தொல்லை காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 March 2020 11:58 PM GMT (Updated: 5 March 2020 11:58 PM GMT)

புதுவையில் பிரபல நடிகர் ஆனந்தராஜின் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கடன் தொல்லை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி திருமுடிநகர் முதலாவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கனகு என்கிற கனகசபை (வயது40). இவர் பிரபல நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார். திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார்.

தினமும் அதிகாலை எழுந்துவிடும் நிலையில் நேற்று அவரது வீட்டு கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் அங்கு வந்த உறவினர்கள் வீட்டின் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

விஷம் குடித்து சாவு

இதுபற்றி அறிந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் அங்கு கனகசபை பிணமாக கிடந்தது தெரியவந்தது. அருகில் விஷபாட்டில் கிடந்ததால் அதை குடித்து அவர் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வாலும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதன்பின் அங்கிருந்து கனகசபையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

தொடர்ந்து போலீசார் கனகசபையின் வீட்டில் சோதனை போட்டதில் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், முக்கிய பிரமுகர்கள் சிலர் பெயரை குறிப்பிட்டு எழுதி இருப்பதாக தெரிகிறது. கனகசபை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டு தற்கொலை செய்து இருக்கலாமா? அல்லது வேறு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கனகசபை தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவருடைய வீட்டின் முன்பு திரண்டனர். கனகசபையிடம் கொடுத்த பணத்தை யாரிடம் கேட்பது? என்று தெரியாமல் அவர்கள் அலைமோதினர்.

Next Story