வேன்கள் மோதல்; ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 13 பேர் படுகாயம்


வேன்கள் மோதல்; ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 13 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 March 2020 10:00 PM GMT (Updated: 6 March 2020 5:35 PM GMT)

கீரனூர் அருகே சரக்கு வேனும், பயணிகள் வேனும் மோதிக்கொண்டதில், ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

கீரனூர், 

விழுப்புரத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து ஒரு பயணிகள் வேனில் ரேஷன்கடை ஊழியர்கள் விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றனர். அந்த வேனை டிரைவர் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ரவி(வயது 32) ஓட்டினார்.

இதேபோல் திருச்சியில் இருந்து பால்பாக்கெட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் புதுக்கோட்டையை நோக்கி வந்தது. திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் பிரிவு சாலையில் வந்தபோது சரக்கு வேனும், பயணிகள் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன் முற்றிலும் சேதமடைந்தது. பயணிகள் வேனின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பயணிகள் வேன் டிரைவர் ரவி, அதில் பயணம் செய்த ரேஷன் கடை ஊழியர்கள் நாராயணன்(41), முத்துலெட்சுமி(38), ராஜலெட்சுமி(39), முருகன்(50), அம்மாபொண்ணு(32), சோமசுந்தரம்(49), செந்தில்வடிவேல்(46), சார்லஸ்(49), மதியழகன்(40), அய்யப்பன்(35), உமாமகேஸ்வரி(27) ஆகியோரும், சரக்கு வேன் டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த திருப்பதியும் படுகாயமடைந்தனர். மேலும் விபத்து காரணமாக திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் தலைமையிலான போலீசார், போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்ட னர். மேலும் படுகாய மடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் 11 பேரை மீட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிய டிரைவர்கள் திருப்பதி, ரவி ஆகியோரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி மீட்டனர். இதில் ரவியை திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், திருப்பதியை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் சில இடங்களில் சிக்னல்கள் மற்றும் ஒளிரும் விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், எனவே அங்கு சிக்னல் மற்றும் ஒளிரும் விளக்குகளை அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story