செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி தாய், மகள் உள்பட 3 பேர் சாவு


செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி தாய், மகள் உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 7 March 2020 10:30 PM GMT (Updated: 7 March 2020 5:30 PM GMT)

செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி தாய், மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் வைகுந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 27). நேற்று காலை இவர் அந்த பகுதியில் உள்ள ஏரியில் துணி துவைப்பதற்காக தனது மகள் சுபாஷினி(6), உறவினர் மகளான தேவதர்ஷினி(10) ஆகியோருடன் சென்றார்.

துணி துவைக்க சென்றவர்கள் நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்பாததால் அவர்கள் 3 பேரையும் தேடி உறவினர்கள் ஏரிக்கு சென்றனர். ஏரிக்கரையில் துணிகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஏரியில் இறங்கி தேடி பார்த்தனர்.

ஏரியில் இருந்து ராஜேஸ்வரி, சுபாஷினி, தேவதர்ஷினி ஆகியோரை பிணமாக மீட்டனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏரியில் மூழ்கி பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏரியில் மூழ்கி தாய், மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற சுபாஷினி, தேவதர்ஷினி ஆகியோரை காப்பாற்ற ராஜேஸ்வரி முயன்றபோது அவர்களுடன் சேர்ந்து ராஜேஸ்வரியும் ஏரியில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏரியில் மூழ்கி பலியான சுபாஷினி 1-ம் வகுப்பும், தேவதர்ஷினி 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

Next Story