தஞ்சை மானம்புச்சாவடியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு; கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்


தஞ்சை மானம்புச்சாவடியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு; கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்
x
தினத்தந்தி 7 March 2020 11:00 PM GMT (Updated: 7 March 2020 7:29 PM GMT)

தஞ்சை மானம்புச்சாவடியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளியக்ரஹாரம், வடக்கு வாசல், மாரிக்குளம் பகுதியில் கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த வார்டுகளில் இருந்து கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சமுத்திரம் ஏரி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பாசனத்துக்கு விடப்படுகிறது.

மேலும் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக ஆங்காங்கே ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாநகரில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த ஆள்நுழை குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப் பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்

தஞ்சை மானம்புச்சாவடி வெங்கடேச பெருமாள் கோவில் தெருவில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. குளம்போல கழிவுநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் செம்மண்ணை கொட்டி வைத்தனர். ஆனால் கழிவுநீர் அதிகமாக வெளியேறுவதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கழிவுநீரில் மிதித்து தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த தெருவின் வழியாக 4 பள்ளிகளுக்கு மா ணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இப்படி அதிகஅளவில் மாணவ, மாணவிகள் செல்லக்கூடிய தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக குழாயில் அடைப்பை சரி செய்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story