கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்


கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2020 10:15 PM GMT (Updated: 7 March 2020 7:43 PM GMT)

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் என்று காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க கவுரவ தலைவர் தர்மராஜன் தலைமை தாங்கினார். தலைவர் சின்னதுரை, துணை செயலாளர் சுகுமாரன், நிர்வாகிகள் சாமிநாதன், வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் விமலநாதன் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் தேவையான திருத்தங்களை செய்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

பயிர்க்கடன் மானியத்தை, மத்திய அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்ததோடு பயிர்க்கடன், நகை கடன் வட்டியை 7 சதவீதத்திலிருந்து 9.25 சதவீதமாக உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. எனவே வேளாண்மை உற்பத்திக்கு வட்டியில்லா கடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்க வேண்டும்.

நினைவு மண்டபம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி போராடிய விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். அரியலூர், திருச்சி மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் இணைக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு கல்லணையில் நினைவு மண்டபமும், இயற்கை வழி வேளாண் பல்கலைக்கழகத்தை

நம்மாழ்வார் பெயரில் தஞ்சை மாவட்டத்தில் தொடங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகப்படுத்தி, அத்திட்டத்தை கேரளா மாநிலம் போன்று வேளாண்மை பணிகளுக்கு பயன்படும் திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும்.

ஓய்வூதியம்

கேரளாவில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரத்து 795 ஆதார விலையையும் உத்தரப்பிரதேசம், மகாரா‌‌ஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்து 200 வழங்கப்படுவது போல தமிழக அரசும் விலை அறிவித்து வழங்க வேண்டும்.

ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட குறுவை சம்பா தொகுப்பு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

குடிதாங்கி- திருவைகாவூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் 500 புதிய நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். 55 வயதை கடந்த அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story