சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது


சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2020 11:30 PM GMT (Updated: 7 March 2020 8:32 PM GMT)

சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெள்ளைச்சாமி என்பவர் வீட்டில் இருந்து சிவன், பார்வதி அம்மன் உள்பட தொன்மையான 4 சிலைகளையும், ஒரு பீடத்தையும் சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைப்பற்றினர். விசாரணையில் இந்த சிலைகளை ரூ.20 கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேரை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 5 பேரை தேடிவந்தனர்.

5 பேர் கைது

இந்தநிலையில் சிலை திருட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமாரி, லதா மற்றும் போலீசார் நேற்று காலை ராமநாதபுரம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயபாலன், காளிதாஸ், சாந்தகுமார், இருதயராஜ், இளமாறன் ஆகிய 5 பேரை பிடித்து கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்து இருந்த 22 செ.மீ. உயரம் கொண்ட ஸ்கந்தர் உலோகசிலை ஒன்றையும் கைப்பற்றினார்கள். மேலும், குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story